July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கார் முகப்பில் அதிமுக கொடி: வீடு திரும்பினார் சசிகலா

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று பெங்களூர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில்  மருத்துவமனையில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடி பொருத்திய காரில் பயணித்துள்ளார்.

சசிகலா ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் சென்னை திரும்புவார் எனவும் ஒரு வாரம் பெங்களூர் அருகே உள்ள ஹெப்பல் நகரில் சசிகலா தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேவேளை மருத்துவமனைவியிலிருந்து தனது விடுதிக்கு டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்கள் இடம்பெற்ற நிலையில் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க முடியாது என்றும் அதிமுகவுக்கு உரிமைக்கொண்டாட முடியாது எனவும் அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் தனது காரின் முகப்பில் அதிமுக கட்சியின் கொடியை பயன்படுத்தி சென்றமை சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.