July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எம்ஜிஆர், ஜெயலலிதா கோயிலை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோயிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்துள்ளனர்.

தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தனது சொந்த செலவில் அமைத்துள்ள இந்த கோவிலில் வழிபாடு தெய்வங்களாக முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் அங்கு அமைக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பயிற்சி மையம், கலையரங்கம் ஆகியவற்றையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதன்போது அங்கு உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, இரு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக இன்று கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த நல்லாட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்க சபதம் ஏற்போம் எனவும் இன்று வரை அதிமுக 30 ஆண்டுகாலம் இந்த மண்ணிலே ஆட்சி செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “சட்டமன்றத் தேர்தலில் ஒருமித்த கருத்தோடு பணியாற்றி மீண்டும் அதிமுக ஆட்சி தொடர அதிமுகவினர் உழைக்க வேண்டும்” எனவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.