July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்”

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனின் தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று, இவ்வழக்கு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விடுதலை முடிவை தமிழ்நாடு ஆளுநர் 3 அல்லது 4 நாட்களுக்குள் முடிவு செய்வார் என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என கால அவகாசத்தை நீட்டித்துள்ளனர்.

மேலும், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள போதும் ஆளுநர் இந்த பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.