July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க வேண்டும்’

இலங்கை கடற்படையினரின் தாக்குதல் காரணமாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்படையினரின் இவ் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு தனது அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மத்திய அரசாங்கத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பொருத்தமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக  தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் காணாமல்போன தகவல்கள் கிடைத்ததும் இந்திய கடற்படையினர் எல்லை காவல்படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அவர் தற்போது அவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.