July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசி : இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளின் ஒழுங்குமுறை அனுமதிக்காக காத்திருக்கும் இந்தியா!

கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட அனைவருக்கும் உதவும் வகையில் இந்தியா இன்று முதல் பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் சிஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கான விநியோகப் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை குறித்த நாடுகள்  உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

அயல் நாடுகளுக்கான தடுப்பூசி விநியோக தொடர்பில் இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அயல் மற்றும் முக்கிய நட்பு நாடுகளிலிருந்து இந்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு அமைவாகவும், தடுப்பூசி விநியோகப் பணிகள் 20 ஜனவரி 2021 முதல் ஆரம்பமாகிறது என இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை படிப்படியாக வழங்குவதைக் கருத்தில் கொண்டு, நட்பு நாடுகளுக்கு COVID-19 தடுப்பூசிகளை இந்தியா தொடர்ந்து வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் ஓர் அட்டவணையின் கீழ் வழங்க உள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.