October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருமண நிகழ்வில் டிஜிட்டல் முறையில் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய இந்திய ஜோடி!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உலக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையொன்றைச் செயற்படுத்தி, புதுமணத் தம்பதியினர் அசத்தியுள்ளனர்.

இந்தியாவின், மதுரையில் இடம்பெற்றுள்ள குறித்த திருமண நிகழ்வில் தம்பதியினர் மொய்ப் பணத்தை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு டிஜிட்டல் முறை மூலமாகப் பணத்தை வைப்பிலிடும் கியூ.ஆர். முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்காக தங்களது திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண மண்டபத்தில் கியூ.ஆர். குறியீட்டைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த முறை மூலமாகத் திருமணத்திற்கு வருகை தரமுடியாத உறவினர்களும் மொய்ப் பணத்தை வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பதாக பணம் பரிவர்தனை செய்யும் அட்டைகள் மூலமாக மொய்ப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், பணம் மற்றும் ஏடிஎம் அட்டைகளை கைமாற்றுவதால் ஏற்படும் கொரோனா பரவல் அவதானம் இப்புதிய முறை மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

இதன் காரணமான இவர்களின் இந்த யோசனை பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறு சேமிப்பாக உறவுகளின் நிகழ்வுகளில் வழங்கப்படும் மொய்ப்பணத்தை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடிவதால், இந்த யோசனையைச் செயற்படுத்தியதாகத் திருமண தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.