July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அரசாங்கத்தின் கைதுகளைக் கண்டித்து எதிர்வரும் 23 ஆம் திகதி ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்

தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதைக் கண்டித்தும் ராமேஸ்வர மீனவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, கச்சத்தீவு நோக்கிச் சென்று போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்களை நேற்று யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதோடு, மீனவர்களின் நான்கு விசைப்படகுகளை அரசுடமையாக்குவதற்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இலங்கை அரசாங்கம் இந்த உத்தரவை மீளப்பெற வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், 1976 ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட உரிமை உண்டு என்பதையும் ராமேஸ்வர மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே எதிர்வரும் 23ஆம் திகதி ராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.