July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பி.சி.ஆர் முடிவுகளின் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தொடர்பில் தீர்மானம்’

வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தொடர்பாக தீர்மானிக்கப்படும் என வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார்.

இதேவேளை,  நகர்ப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள ஏழுபாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா நகரில் கொரோனா பரவல் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அவரச கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், வவுனியா நகரில் 54 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வியாபார நிலையங்களில் பணிபுரிபவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பட உள்ளது என்றார்.

அத்துடன் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தொடர்பாக தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட சந்தியிலிருந்து இறம்பைக்கும் மகளிர் பாடசாலை வரையான சந்தி,தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வரையான பகுதி, காமினி மகாவித்தியாலயத்தை உள்ளடக்கிய பகுதிகள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்படாதநிலையில் கூட்டுறவுச் சங்கங்கள், சதோசநிறுவனம், மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு முதற்கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என மாவட்ட மேலதிக அரச அதிபர் மேலும்  கூறினார்.

இதேவேளை இன்றிலிருந்து சாலை ஓரங்களில் வியாபாரம் மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் நாளை முதல் காமினி மகாவித்தியாலய மைதானத்தில் நடைபாதை வியாபாரங்களை முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

அத்துடன், நகர்ப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், மற்றும் ஆரம்ப பாடசாலை, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், முஸ்லீம் மகாவித்தியாலயம் மற்றும் ஆரம்ப பாடசாலை ஆகிய ஏழுபாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.