
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள “கொவிஷீல்ட்” கொரோனா தடுப்பூசியின் விலை ரூ. 292 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
தடுப்பூசியின் விலை மலிவாகவும், அனைவரும் வாங்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என சீரம் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அடார் பூனவல்ல தெரிவித்துள்ளார்.
எனவே இந்திய அரசு 3 முதல் 4 அமெரிக்க டொலர் (ரூ.219-292) என்ற மலிவு விலைக்கு தடுப்பூசியை பெறமுடியும். அத்தோடு மிக அதிக அளவில் வாங்குவதால் இந்த விலைக்கு கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தடுப்பூசியை பொறுத்தவரை முதலில் இந்தியாவுக்கும், அடுத்ததாக சர்வதேச நாடுகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து கொவிஷீல்ட் தடுப்பூசி தனியார் சந்தைக்கு அனுப்பப்படுவதோடு அங்கு இரு மடங்கு விலையில் விற்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு மாதத்துக்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படுவதுடன் ஏப்ரல் மாதத்திற்குள் இது இரட்டிப்பாகும் எனவும் பூனவல்லா தெரிவித்தார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொவிஷீல்ட் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவேக்சின் தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்திருந்தது.
இதனையடுத்தே இந்த தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.