July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கியது ஏன்?; இந்திய நிபுணர்கள் கேள்வி

இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளிற்கு அவசர அனுமதியை வழங்கியமை குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மருந்துகளை சோதனையிடும் நடவடிக்கை முற்றாக முடிவடைவதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவக்சின் மற்றும் ஒக்ஸ்போர்ட்டின் அஸ்டிரா ஜெனேகாவின் மருந்துகளிற்கு இந்தியாவின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய பிரதமர் இந்த மருந்துகள் கொரோனா வைரஸ் நிலைமையை மாற்றக்கூடியவை என பாராட்டியுள்ளார்.

எனினும் மருந்துகளிற்கு அனுமதி வழங்குவதில் இந்தியா அவசரப்பட்டுவிட்டது என சுகாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மருந்துகளின் செயல்திறன் குறித்த தரவுகள் இல்லாததன் காரணமாக எழும் தீவிர கவலைகளும் அத்துடன் வெளிப்படைத்தன்மையில்லாததும் பதில்களை விட அதிகமான கேள்விகளை எழுப்பக்கூடும் என அனைத்து இந்திய மருந்து செயற்பாட்டு வலையமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இது எங்களின் விஞ்ஞான ரீதியிலான முடிவெடுக்கும் அமைப்புகளின் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முழுமையடையாமல் ஆய்வு செய்யப்பட்ட தடுப்பூசியை அங்கீகரிக்கும் விஞ்ஞானத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நாங்கள் முன்னர் ஒருபோதும் இதுபோன்ற ஒன்றை பார்த்ததில்லை என மருத்துவ நிபுணர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

செயல்திறன், தரவு எதுவும் வழங்கப்படவுமில்லை வெளியிடப்படவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.