July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகள் போராட்டத்தில் தொடரும் உயிர்ப் பலி; 70 வயது விவசாயி தற்கொலை

இந்தியா, புதுடில்லி உத்தர பிரதேச எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 70 வயது விவசாயி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

“எனது தியாகம் வீணாககூடாது, போராட்டம் இடம்பெறும் பகுதியிலேயே என்னை புதையுங்கள்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு அந்தப் பகுதியில் உள்ள கழிப்பறையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் 38ஆவது நாளாகவும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆறு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.