October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காஸ்மீரில் 75க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் கைது

ஜம்மு காஸ்மீரின் 75க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸாரும் உள்ளுர் அரசியல்வாதிகளும் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி தேர்தலில் காஸ்மீரின் மாநில அரசியல் கட்சிகள் வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து அரசியல் குழப்பநிலை ஏற்படுவதை தடுப்பதற்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காஸ்மீரில் இந்த வாரம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்தில் பிராந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்தே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் தடை செய்யப்பட்ட ஜமாத்தி இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கைதுகள் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை அலட்சியம் செய்கின்றன என தேசிய மாநாட்டு கட்சியின் பேச்சாளர் இம்ரான் நபீர் தார் தெரிவித்துள்ளார்.

தங்களது கூட்டணி பெற்றுள்ள வெற்றி மாநில மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என முன்னாள் முதல்வர் ஓமார் அப்துல்லா தெரிவித்துள்ளார்.