July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விவசாயிகளின் போராட்டத்திற்கு தலைவணங்குகிறேன்’

28 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தலை வணங்குவதாகவும், நாம் தமிழர் இந்த போராட்டங்களை கடைசி வரை ஆதரிக்கும் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

130 கோடி இந்திய மக்களின் உணவு சந்தையை, இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தருவதற்காகவே, புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதை எதிர்த்து, 28 நாட்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து, உலகத்திற்கே முன்மாதிரியாக திகழும் விவசாயிகளுக்கு தலை வணங்குவதாகவும், கடைசி வரை அவர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்றும் இது மக்கள் புரட்சி என்றும் குறிப்பிட்டார்

இதேபோல எம்ஜிஆரை பற்றி அவர் குறிப்பிடுகையில், எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மக்களுக்காக என்ன செய்துவிட்டார்? மருத்துவத் துறையும், கல்வித்துறையும், தனியாருக்கு தாரை வார்த்தார்.இதுதான் எம்ஜிஆர் ஆட்சியின் சாதனை என்று குறிப்பிட்டார்.

சீமானின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு நிகழ்வில் ரஜினியையும் கமலையும் கடுமையாக சாடியுள்ளார்.

படத்தில் நடித்துவிட்டு நேரடியாக முதல்வர் சீட்டில் வந்து உட்கார்ந்து விட வேண்டும் என்று ரஜினியும் கமலும் விரும்புகிறார்கள்.

இவர்களுக்கு மக்கள் பிரச்சனைகளைப் பற்றி என்ன தெரியும்?.தமிழர்கள் பற்றியும், தமிழர்கள் வரலாறு பற்றியும் இவர்களுக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்

காமராஜர், கக்கன், இரட்டைமலை சீனிவாசன், தீரன் சின்னமலை, முத்துராமலிங்கத்தேவர்,புலித்தேவன், போன்றோரின் அறிவைப் பற்றியோ, வீரத்தைப் பற்றியோ, இவர்களுக்கு என்ன தெரியும் ?

இந்த தலைவர்களை பற்றி, இவர்கள் கொண்டிருந்த சமூக பார்வையைப் பற்றி, இவர்களின் கனவுகளைப் பற்றி, இவர்களால் தொடர்ச்சியாக இரண்டு நிமிடம் பேச முடியுமா?

உலகளவில் பிரபலமான ஷாருக்கான், சல்மான்கான் போன்ற நடிகர்களுக்கு தோன்றாத, முதல்வர் ஆசை இவர்களுக்கு எப்படி வந்தது?

ரஜினிக்கும், கமலுக்கும் அரசியலில் விழும் மரண அடி, அடுத்து வரும் விஜய்க்கு ஒரு பாடமாக அமையும் என்று சீமான் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.