October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்கள் நீதி மய்யம் சார்பில் மூன்றாவது அணி சாத்தியம்’ ; கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழக  சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி  உருவாகுவதற்கான சாத்தியம் உள்ளது என நடிகரும் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், “மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆன்மீக அரசியலும் ஒன்று சேருமா என்ற கேள்விக்கு தற்போதைக்கு பதில் கூற முடியாது.மக்கள் நீதி ம‌ய்யம் தலைமையில் 3வது அணி சாத்தியம். எப்போது அது சாத்தியம் என்பதை சொல்ல முடியாது.

உங்கள் வாழ்த்துக்களோடு நான் பிரச்சாரத்துக்கு புறப்படுகிறேன்.பல இடங்களில் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.சில நகர்களில் எங்களுக்கு அனுமதி கடைசி நிமிடத்தில் மறுத்து இருக்கின்றார்கள்.

எங்களுக்கு தடை  புதிதல்ல. எங்கள் பிரச்சாரம் துவங்கி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.

தேர்தல் நேரத்தில் அணிகள் கூடும், அணிகள் பிளவுப்படும்.சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் செயல்பட வேண்டிய முறையில் செயல்படுவோம்.

சீர்திருத்தப்பட்ட புதிய தமிழகத்தை உருவாக்குவதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வோம். தமிழகத்தைச் சீரழித்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். அதை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.

இனி செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து தான் நாங்கள் பேச உள்ளோம்”  என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.