July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பு; மூவர் பலி-32 மீனவர்களைக் காணவில்லை

photo: Twitter/ Greater Chennai Corporation

நிவர் புயல் அனர்த்தம் காரணமாக தமிழகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 2 இலட்சத்து 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் 3,085 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க 921 மருத்துவ முகாம்களும் 235 நடமாடும் சேவைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

புயலால் 101 குடிசைகள் சேதமடைந்துள்ளதோடு, 380 மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் அத்தியாவசிய பணிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் தமிழக அரசின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமிழ் நாட்டின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்குச் சென்ற 192 படகுகளில் அதிகமானவை கரைக்குத் திரும்பியுள்ளதாகவும், 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களைத் தொடர்புகொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.