July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்; தமிழ் திரையுலக பிரபலங்கள் கூட்டாக வேண்டுகோள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்யவேண்டும் என தமிழக சினிமா பிரபலங்கள் பலர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரும் பாடல் ஒன்று நேற்று வெளியானதைத் தொடர்ந்து பேரறிவாளனை விடுதலை செய்யவேண்டும் என்ற ஹாஸ்டாக் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழக ஆளுநர் பேரறிவாளனை விடுதலை செய்யவேண்டும் என விஜய்சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அற்புதம்மாள் அவர்களின் 29 வருட போராட்டம்,ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும். தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால் உடனே நிகழ வேண்டி நானும் போராடுகிறேன் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அற்புதம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காத குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும் எதிர்கொண்ட துயரமும் அளவிட முடியாதது.

விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

‘தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால் பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்ப வேண்டியிருக்கிறது’ என பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.