October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லாஸ்லியாவின் தந்தை மரணம்; ஆறுதல் தெரிவித்து வரும் ரசிகர்களும் திரை பிரபலங்களும்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற இலங்கை பெண் லாஸ்லியாவின் தந்தை திடீரென மரணம் அடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்த வருடம் லாஸ்லியாவின் தந்தை கனடாவிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது நடந்ததையும் ,லாஸ்லியா உள்ளே தனது தந்தை குறித்து பேசிய காட்சிகள் அனைத்தையும் அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பல வருடங்கள் கழித்து லாஸ்லியா அவரது தந்தையை கடந்த வருடம் இந்தியாவில் விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைத்து சந்தித்து ஒரு வருடம் கடந்த நிலையில் திடீரென அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணச் செய்தி கேட்டு திரை பிரபலங்களும் அவருடைய ரசிகர்களும் மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளனர் .

பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் ,லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்த செய்தி தன்னை உலுக்குவதாக வேதனையுடன் கூறியுள்ளார் .

தந்தையின் மேல் லாஸ்லியா எத்தனை அன்பும் கனவும் வைத்திருந்தார் என்பது நன்றாக தெரியும்.இந்த செய்தி என்னையே உலுக்குகிறது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் .

எப்படி தாங்குவாய் மகளே, சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன் என தெரியவில்லை என ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் .

இவ்வாறு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் . தற்போது இந்தியாவில் இருக்கும் லாஸ்லியா இலங்கைக்குச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது .

இருந்த போதிலும் இலங்கையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இலங்கைக்கு செல்ல எடுக்கும் முயற்சி சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே .

இருந்தாலும் விஜய் தொலைக்காட்சியினர் அவருடன் இருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார் பதிவிட்டிருக்கிறார்.

லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை கேள்விப்பட்ட வனிதா விஜயகுமார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

கொரோனா பரவியுள்ள சூழலில் கனடாவிலுள்ள அவரது அப்பாவின் உடல் இலங்கைக்கு வர தாமதமாகும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார் .

ஆனால் இலங்கைக்கு அவரது பூத உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை செல்ல போராடி வரும் லாஸ்லியாவுடன் விஜய் தொலைக்காட்சி குழுவினர் உள்ளனர் எனவும் வனிதா ட்விட் செய்துள்ளார்.