October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எஸ்.பி.பியின் குரலில் வெளியானது ரஜினியின் ‘அண்ணாத்த’ முதல் பாடல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘அண்ணாத்த… அண்ணாத்த’ என்ற முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘அண்ணாத்த’ அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘அண்ணாத்த… அண்ணாத்த’ பாடல் இன்று  வெளியாகியுள்ளது.

இந்தப்பாடலை விவேகா எழுதியுள்ளதுடன், மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். அவர் கடைசியாக பாடிய பாடலும் இதுவாகும்.

இது தொடர்பில் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் “45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி ‘அண்ணாத்த’ படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ‘#AnnaattheFirstSingle’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும், ‘இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில், ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி கொண்டாட்டமாக நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா ஆகியப் பகுதிகளில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.