October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ட்ரெய்லர் வெளியீடு

தமிழ் திரை உலகி்ன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் நெற்றிக்கண் படம் ஓடிடியில் வெளியாகும் திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முழுக்க முழுக்க த்ரில்லர் கதைக் களமாக உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நயன்தாராவின் திரைவாழ்க்கையில் அடுத்த மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான தோற்றத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, பார்வையற்றவராக எதிர்கொள்ளும் சவால்கள் காண்போரை கலங்க வைக்கிறது.

ட்ரெய்லரில் பார்வையற்றவரான நயன்தாரா பேசும் வசனங்கள் படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

”நான் உன்ன என்னல்லாம் பண்ணப்போறேங்கிறதை நீ பார்க்கப்போற பாரு”, ”அதை நினைச்சாதான்டா எனக்கு பாவமா இருக்கு” என நயன்தாரா பேசும் வசனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் நெற்றிக்கண் திரைப்பட ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

ஒரு விபத்தின் மூலமாக பார்வையற்றவராக மாறும் நயன்தாரா தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக் கருவாக இருப்பது ட்ரெய்லர் மூலமாக நமக்கு தெரியவருகிறது.

2017-ஆம் ஆண்டு வெளியான அவள், படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ் இந்த ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கியுள்ளார்.

மேலும், நெற்றிக்கண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் திகதி டிஸ்னி ப்ளஸ் ஹொட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

“இருக்கும் கண்கள் மூடினால், மூன்றாவது கண் திறக்கும் – இது நயன்தாராவின் சுட்டெரிக்கும் நெற்றிக்கண்” என்ற வசனம் சமூக வலைத்தளங்களி வைரலாகி வருகிறது.