![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/E6FX-I6WEAEfQ8V-e1626174985540.jpg?fit=576%2C585&ssl=1)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்வரும் 14 ஆம் திகதி அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு செல்லவுள்ளார்.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
தற்போது இதற்கான வேலைகளில் படக் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பை நிறைவு செய்வதற்காக மேற்கு வங்கத்தில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
அண்ணாத்த திரைப்படத்தில் இன்னும் நான்கு நாட்களே ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும், அண்ணாத்த படத்தில் இடம்பெறும் ரஜினிகாந்தின் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். அண்ணாத்த படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அடுத்ததாக ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.