June 16, 2025 18:55:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்திய சினிமாவின் இணையற்ற நாயகனை இழந்துவிட்டோம்’; திலீப் குமார் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத் திணறல் காரணமாக மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார்.

திலீப் குமாரின் மறைவுக்கு இந்திய திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அமிதாப் பச்சன், அவரது மறைவு தந்த துக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் வரப்போவதில்லை, நான் எனது ஆதர்ச நாயகனை இழந்துவிட்டேன், ஒரு பல்கலைக்கழகத்தை இழந்துவிட்டேன் என பதிவிட்டிருக்கிறார்.

திலீப் குமாருக்கு முன், திலீப் குமாருக்குப் பின் என்றுதான் இந்திய சினிமாவின் வரலாறு என்றும் எழுதப்படும் என அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஆன்மா சாந்தியடைய, அவரின் குடும்பத்தினர் வேதனையை தாங்கிக் கொள்ள தான் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ள அமிதாப்பச்சன்,பெரும் சோகத்தில் இருக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

 

அதேபோல் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் திலீப் குமார் மறைந்தார், இந்தியா- பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் உறவுப் பாலமாக திகழ்ந்தவர் என குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

ஏழைகளின் மீது கரிசனம் மிக்கவர்,நிறை வாழ்வு வாழ்ந்த கதாநாயகருக்கு புகழஞ்சலி என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் கமல்.

 

நடிப்பில் ஒரு தரத்தையும், அர்ப்பணிப்பையும் பேண வேண்டும் என்று தன்னைப் போன்ற பல நடிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை திலீப் குமாருடையது என புகழ்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.

உண்மையில் இந்தியாவின் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.ஆனால், அவரது அற்புதமான நடிப்பு என்கிற பொக்கிஷத்தை நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.

நடிப்பில் அவரது புரிதல் அணுகு முறையை இன்னும் சமகால நடிகர்கள் சிலர் தைரியமாக முயற்சி செய்கின்றனர் என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

 

இந்தியத் திரையுலகின் ஜாம்பவானும் திரை வழியே மக்களின் உள்ளங்களை கவர்ந்தவருமான நடிகர் #DilipKumar அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்குமே பேரிழப்பு என தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

https://twitter.com/manmanthbais/status/1412723896357310470?s=20