July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஷ்ணு விஷாலின் “இன்று நேற்று நாளை” இரண்டாம் பாகம்

கடந்த 2015ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி விமர்சனத்திலும் வசூலிலும் பெரும் வெற்றி பெற்ற படம் இன்று நேற்று நாளை.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சற்று வித்தியாசமான படமான இன்று நேற்று நாளை,கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என காலங்களை வைத்து திரைக்கதை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இன்று நேற்று நாளை பாகம் 2 படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று நேற்று நாளை பாகம் ஒன்றில் மியா ஜார்ஜ்,கருணாகரன், பகவதி பெருமாள் ,அனுபமா குமார் இரவிஷங்கர்,ஆர்யா உட்பட பலர் நடித்திருந்தனர்.

டைம் டிராவல் கதைக் களத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தை ஆர். வி. குமார் இயக்கியிருந்தார். ஒரு இயந்திரத்தின் மூலம் டைம் ட்ராவல் செய்து நினைத்ததை சாதிக்கும் இந்தப்படம் உருவாகியிருந்த விதம் எல்லோர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருந்தார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் பூஜையுடன் படப்பிடிப்பு தாெடங்கியுள்ளது.

இந்த படத்திற்கு இயக்குனர் ஆர்.வி. குமார் கதை எழுதி இருக்கிறார். புதுமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தயாரிப்பாளர் சீ.வி. குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

இன்று நேற்று நாளை படத்தின் முதல் பாகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுத்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இரண்டாம் பாகமும் சிறந்த கதைக்களத்துடன் அமோக வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.