
2020 ஆம் ஆண்டில் நடிகர் விஜயின் செல்பி புகைப்படம் அதிகம் ரீ டுவிட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக டுவிட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் நெய்வேலியில் படப்பிடிப்பிலிருந்த விஜய் அங்கிருந்த வேன் மீது ஏறி தன்னை பார்க்க வந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் .
விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்றது .
பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 12ம் திகதி வரை மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றது. இதற்கிடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் .
இந்த நிலையில், ஆறாம் திகதி என்எல்சி சுரங்க நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட .பாஜகவினர் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது யார் ? உடனே அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி கோஷங்கள் எழுப்பினர் .
இதனை தொடர்ந்து நெய்வேலி இரண்டாவது சுரங்கம் முன்பு ரசிகர்கள் அதிக அளவு குவிந்தனர். இரண்டு நாட்கள் காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க முயன்றனர்.
இந்நிலையில் மீண்டும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் சுரங்க நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் வெளியே வந்த விஜய் வேன் மீது ஏறி தனது ரசிகர்களை கண்டு கையசைத்தார் ,பின்னர் ரசிகர் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் .
இந்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் மட்டுமல்லாது விஜய் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து அன்றைய தினமே சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது இந்தப் புகைப்படம் 2020 ஆம் ஆண்டில் அதிகம் ரீடுவீட் செய்யப்பட்டு சாதனை படைத்த டுவிட் என டுவிட்டர் இந்தியா பதிவிட்டுள்ளது.