October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்

Photo: BCCI/IPL

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிளே ஓவல் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் லோகேஸ் ராகுலின் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி இன்று விராத் கோஹ்லியின் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை தற்போதைக்கு பெங்களுர் அணியே சகலதுறைகளிலும் பலம் பொருந்திய அணியாகக் காணப்படுகின்றது.


பெங்களுர் அணி தாம் விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றுள்ளமை அவர்களுடைய பலத்துக்கு சான்றாகவுள்ளது. அணித்தலைவர் விராத் கோஹ்லி கடந்த ஆட்டங்களில் அபாரமாக செயற்பட்டுள்ளார்.

Photo: BCCI/IPL


அத்துடன் 360 பாகை வீரர் என வர்ணிக்கப்படும் ஏ.பி டிவிலியர் தனது பங்குகளை அளவுக்கு அதிகமாகவே வழங்கி அதிரடியில் எதிரணி பந்துவீச்சாளர்களை கிறங்கடித்து வருகிறார்.

இவரது ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட் வர்ணனையாளரான ரவி சாஸ்திரி “டிவிலியர்ஸ் நீங்கள் ஓய்வை கைவிட்டுவிட்டு மீண்டும் தென் ஆபிரிக்காவுக்காக விளையாட வாருங்கள். உங்கள் ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது”என வேண்டுகோள் விடுத்திருந்தார்.


ஏரோன பிஞ்ச், கிறிஸ் மொறிஸ் ஆகியோரும் பெங்களுர் அணியை பலப்படுத்துகின்றனர். இலங்கையின் இசுரு உதான பெங்களுர் அணி சார்பா விளையாடும் நம்பிக்கைக்குறிய பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.


மறுபுறம் பஞ்சாப் அணியைப் பார்த்தால் 7 ஆட்டங்களில் ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றுள்ளது. அந்த வெற்றி பெங்களுருக்கு எதிரான என்பதால் பஞ்சாப் அணியின் நிலை சற்று வித்தியாசமானதாக அமைந்துள்ளது.

வெற்றிபெற்ற நம்பிக்கை பஞ்சாபிடம் இருந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெங்களுரிடம் இருக்கும்.


அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் அணிக்கு திரும்புகிறார் எனும் தகவல் மாத்திரமே தற்போதைக்கு பஞ்சாப் அணியை மகிழ்ச்சிபடுத்தும் தகவலாகும்.

அணித்தலைவர் லோகேஸ் ராகுல் என்னதான் போட்டி போட்டு ஓட்டங்களைக் குவித்தாலும் ஏனைய வீரர்களின் சொதப்பலான ஆட்டம் தோல்விக்கு காரணமாகி விடுகின்றது.


அத்துடன், துரதிஷ்டமும் பஞ்சாப் அணியை விட்டுவைப்பதாக இல்லை. அதிரடி துடுப்பாட்ட வீரரான கிளென் மெக்ஸ்வெல் இன்றைய ஆட்டத்திலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றாலே ஏனைய ஆட்டங்களின் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் பஞ்சாப் அணி களமிறங்குவதும் குறிப்பிடத்தக்கது.