March 29, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சவூதி அரேபிய பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; சமூக ஊடகங்களில் கண்டனம்

சவூதி அரேபிய பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

பள்ளிவாசல்களில் தொழுகைகளுக்காக அழைக்கும் பாங்கு கூறும் போது, மொத்த ஒலி அளவின் மூன்றில் ஒன்றைப் பயன்படுத்துமாறு சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதிக ஒலி பாவனை தமக்கு இடைஞ்சலாக இருப்பதாக பொதுமக்கள் முறையிட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுத்ததாக இஸ்லாமிய விவகார அமைச்சர் அப்துல் லதீப் அஷ்ஷெய்க் தெரிவித்துள்ளார்.

எனினும், சவூதி அரசாங்கத்தின் இந்த கட்டுப்பாட்டுக்கு பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கண்டனங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

ஹோட்டல்களில் சத்தமாக ஒலிபரப்பப்படும் இசையும் தடை செய்யப்பட வேண்டுமென்ற ஹேஷ்டெக் சமூக ஊடகங்களில் பிரபல்யம் பெற்றுள்ளது.

ஒலி அளவு கூடிய ஒலிபெருக்கி பாவனை குழந்தைகளின் தூக்கத்தைப் பாதிக்கதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழுகையை மேற்கொள்ள வேண்டியவர்கள் சத்தமாக பாங்கு சொல்லும் வரை இருக்கத் தேவையில்லை என்றும் நேரத்துக்கு தொழுகையை நிறைவேற்றலாம் என்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.