April 19, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மீனவர் பிரச்சனைக்குத் தீர்வின்றேல் ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிடுவோம்”

வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீனவர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது என குறிப்பிட்ட அவர், தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வினை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வினை பெற்றுதர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம் பெற்று ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிடுவோம் என சாணக்கியன் கூறியுள்ளார்.