
நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை அக்கரப்பத்தனை – வோல்புறுக் பகுதியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக தளம் வெட்டும் போது, மண் மேடு சரிந்து விழுந்ததில் மண்ணில் புதையுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய சுப்ரமணியம் ரவிக்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் மூன்று பேர் தளம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மண்மேடு சரிந்து அவர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மண்ணுக்குள் மூவரும் புதையுண்டிருந்த நிலையில், பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வேளையில் இருவரை மாத்திரம் உயிருடன் மீட்க முடிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.